தண்டையார்பேட்டை, ஆக.23: பாரிமுனையில் உள்ள ஒரு செல்போன் கடையில் உளவுத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர், நேற்று முன்தினம் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, சென்னை ராயபுரத்தை சேர்ந்த மன்சூர் என்பவருடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். அதனடிப்படையில், ஒன்றிய உளவுத்துறை மற்றும் தமிழக கியூ பிரிவு போலீசார் இணைந்து பாரிமுனை 2வது கடற்கரை சாலையில் உள்ள மன்சூரின் செல்போன் கடையில் நேற்று சோதனை நடத்தினர்.
இந்த செல்போன் கடையை மன்சூர் மற்றும் அவருடைய தம்பிகளான ரியாஸ், கபீர் ஆகியோர் இணைந்து நடத்தி வருவது தெரிந்தது. இவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “பெங்களூருவில் கைதான இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர் கொடுத்த தகவலின்பேரில் பாரிமுனையில் உள்ள மன்சூரின் செல்போன் கடையில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் இவர்களுக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவருக்கு தொடர்பு உள்ளதா, என விசாரணை நடத்தினோம். முழு விசாரணைக்கு பிறகுதான் உண்மைநிலை தெரியும்” என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பாரிமுனை கடை வியாபாரிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.