மண்டபம், ஜன. 28: மண்டபம் மணல் பரப்பையும், பாம்பன் தீவு பகுதியையும் இணைக்கும் வகையில், பாம்பன் கடலில் 2.5 கி.மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள், தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், மண்டபம் பேரூராட்சி கடற்கரை பூங்கா பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அந்தப் பகுதியில் இருந்து நுழைவுப் பகுதியான பாம்பன் ரயில் பாலத்தில், பாம்பன் பகுதியை நோக்கி தண்டவாளம் வழியாக நடப்பது, செல்பி எடுத்துக் கொள்வது, போட்டோ எடுத்துக் கொள்வது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போது உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் வரும் காலங்களில் ரயில்வே பாலம் திறக்கப்பட்டு, அதிகமான ரயில்கள் வரும் பட்சத்தில், தண்டவாளத்தில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், பாம்பன் ரயில் பாலங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும், அந்த பகுதியில் ரயில்வே போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.