காஞ்சிபுரம், டிச.17: காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் சூபர்வைசர் வீட்டில் ₹5 லட்சம் ரொக்கத்தினை திருடிச் சென்ற 2 வடமாநில வாலிபர்கள், ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் உலகளந்தார் மாடவீதியைச் சேர்ந்தவர் வடிவேல். வையாவூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சூபர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர், நெல்லுக்கார தெருவில் உள்ள ஒரு வங்கியில் தனது வங்கி கணக்கில் இருந்து ₹5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, பணத்துடன் வீட்டிற்கு வந்த வடிவேல் வீட்டிற்கு வெளியே வராண்டாவில் உள்ள நாற்காலியில் பணத்தை வைத்துவிட்டு பாத்ரூம் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வெளியே நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த பணம் காணாமல் போனதைக் கண்டு வடிவேல் பதறிப்போனார். இதுகுறித்து வடிவேல் உடனடியாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில், விரைந்து செயல்பட்ட சிவகாஞ்சி போலீசார், அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் பணப்பையை எடுத்துக்கொண்டு தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து செல்வது பதிவாகி இருந்தது. இதனையடுத்து, அருகிலுள்ள சிசிடிவிகளையும் ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் 3 பேரும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை பேருந்தில் ஏறிச் செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்து, அவர்களை கண்காணிக்கும்படி கூறியுள்ளனர். மேலும், பூந்தமல்லி நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக பேருந்தை நிறுத்தி பணத்தை திருடிச்சென்ற 3 பேரையும் அதிரடியாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹5 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் 3 பேரும் சிவகாஞ்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து சிவகாஞ்சி போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட 3 பேரும் மத்திய பிரதேசம், ராஜ்கிரா மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த் குமார் (36), சந்தோஷ் (20) மற்றும் 14 வயது சிறுவன் என்பதும், 3 பேரும் வங்கியில் இருந்தே வடிவேலை கண்காணித்தபடி வந்து வடிவேல் வீட்டின் வராண்டாவில் பணத்தை திருடிசென்றதும் தெரியவந்தது. இதில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 வயது சிறுவனை, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், மற்ற 2 பேரை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர்.