Monday, May 27, 2024
Home » பாதியளவு குறைந்த விவசாயம்… பாதாளத்திற்கு சென்ற நிலத்தடி நீர் ஆண்டிபட்டியின் வறட்சியை போக்க முல்லை பெரியாற்று தண்ணீர் வேண்டும்-திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை

பாதியளவு குறைந்த விவசாயம்… பாதாளத்திற்கு சென்ற நிலத்தடி நீர் ஆண்டிபட்டியின் வறட்சியை போக்க முல்லை பெரியாற்று தண்ணீர் வேண்டும்-திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை

by kannappan

ஆண்டிபட்டி :  முல்லைப் பெரியாறு குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் இயற்கை வளங்கள், மலை வளங்கள், நீர்வளங்கள் மிகுந்த பகுதியாக இருந்தது. ஆண்டுதோறும், மாவட்டம் முழுவதும் தங்கு தடையின்றி மழை பெய்து வந்ததால் விவசாயம் செழிப்பாக நடந்து வந்தது. ஆனால் தற்போது பருவமழைகள் குறைந்து விட்ட காரணத்தால் விவசாயம் செய்வதற்கு கடினமான சூழ்நிலை உருவாகி விட்டது. குறிப்பாக ஆண்டிபட்டி பகுதியில் மழையளவு குறைந்து விட்டதால், விவசாயம் செய்யும் நிலங்களும் குறைந்து விட்டது.ஆண்டிபட்டி தாலுகாவை பொறுத்தவரை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களும், 150க்கும் மேற்பட்ட உட்கிராமங்களும் உள்ளனர். இந்த கிராமங்களில் மழை பெய்தால் மட்டுமே தண்ணீர். தேக்கி வைத்து, இருப்பு தண்ணீரை பயன்படுத்துவதற்கும், ஆறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்துவதற்கும் இந்த பகுதிகளில் போதிய வசதி இல்லை. ஆண்டிபட்டி பகுதியில்தான் வைகை அணை இருக்கிறது. எனினும் ஆண்டிபட்டி பகுதி கிராம மக்களுக்கு பயன்படாத ஒன்றாக வைகை அணை அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியினர் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் இல்லாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். இதனால் விவசாயம் பாதியளவு குறைந்து நெல், முந்திரி, வாழை போன்ற பெரியளவில் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகள், தற்போது மழையை எதிர்பார்த்து மானாவாரி பயிர்களை மட்டும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனர்.திப்பரவு அணை திட்டத்திற்கு அடிக்கல் ஆண்டிபட்டி பகுதி கிராம மக்கள் தங்களுக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என  தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று கொண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் திப்பரவு அணை திட்டத்தை ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிக்கு கொண்டு வருவதற்கு முடிவெடுத்தார். வைகை அணையில் இருந்து கால்வாய் மூலம் ஆண்டிபட்டியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதே இந்த திப்பரவு அணை திட்டம். இதனை செயல்படுத்தி தருவதாகவும் எம்.ஜி.ஆர் உறுதியளித்தார். இதற்காக 1984ம் ஆண்டு திப்பரவு அணை திட்டத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. அத்தோடு சரி… இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் திப்பரவு அணை திட்டம் நிறைவேற்றப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வந்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திப்பரவு அணை திட்டம் கிடப்பில் போடப்பட்டதில் இருந்து இன்று வரை விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் திட்டமும் துவங்கவில்லை.. தண்ணீரும் கிடைத்த பாடில்லை… தேர்தலில் எம்.ஜிஆர் மட்டுமல்ல ஜெயலலிதா மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் நின்ற அனைவரும் வாக்குறுதி அளித்தனர். அதன்பிறகு இதனை கண்டு கொள்வதில்லை.மாற்று திட்டம் கையில் எடுப்புதிப்பரவு அணை திட்டத்திற்காக வரையறுக்கப்பட்ட நிலையில், அந்த இடங்கள் தற்போது ஆக்கிரமிப்பு செய்து, வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இனிமேல் திப்பரவு அணை திட்டத்தை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. இதற்காக திப்பரவு அணை திட்டத்திற்கு பதிலாக மாற்று திட்டத்தை கொண்டு வர முடிவு செய்து, முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து ஆண்டிபட்டி பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரும் புதிய திட்டத்தை பொறியாளர்கள் உதவியுடன் தயார் செய்தனர்.மூல வைகை ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு போது வரும் கூடுதல் தண்ணீரையும், முல்லை பெரியாற்றில் வரும் உபரிநீரையும் இணைத்து குழாய் மூலம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து குளம், கண்மாய், ஊரணி போன்றவற்றில் நிரப்பப்படும்.ராட்சத குழாய் மூலம் தண்ணீர்இந்த திட்டம் மூலம் முல்லை பெரியாறு குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு கண்டமனூர், கணேசபுரம் வழியாக ஏத்தக்கோவில் வரை சுமார் 58 கிலோ மீட்டருக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும். இதன்மூலம் கணேசபுரம், புதுக்குளம், விருமானுத்து, தெப்பம்பட்டி, அம்மாபட்டி மூம்மூர்த்தி, கொத்தப்பட்டி புல்லுவெட்டி, அதிகாரி உள்ளிட்ட 21 கண்மாய்களும், 40 ஊரணி குளங்களிலும் தண்ணீர் நிரப்பப்படும்.மேலும் இதன்மூலம் சின்னமனூர் அருகே மேட்டுப்பகுதியான ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் பயன்பெறும். இந்த கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்படுவதால் விவசாயத்திற்கும் தண்ணீர் தடையின்றி கிடைப்பதுடன், கிராம பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.விவசாயி சுப்புராஜ் என்பவர் தெரிவிக்கையில், ‘ஆண்டிபட்டி மிகவும் வறட்சியான பூமியாக உள்ளது. மழையளவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு, விவசாயத்திற்கு பிரச்னை இல்லாமல் இருக்கும். மேலும் அனைத்து இடங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும். எனவே இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.விரைவில் வறட்சி நிலை மாறும்எம்எல்ஏ மகாராஜனிடம் கேட்ட போது கூறியதாவது, ‘தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பகுதி மட்டும் தான் வறட்சி நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த வறட்சியை போக்குவதற்கு தான் முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அனைத்து கண்மாய்களுக்கும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வரையறை செய்து அதற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது 2020-2021ம் ஆண்டிற்கு ரூ.256.30 கோடி நிதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுப்பணி துறை அமைச்சர் சம்மதம் தெரிவித்து விட்டார். தற்போது இந்த திட்டம் நிதியமைச்சரிடம் உள்ளது. விரையில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இந்த திட்டம் நிறைவேற்றுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்’ என்றார்.திட்டத்தை கையில் எடுத்த திமுக எம்.ஜி.ஆர் கொண்டு வந்த திப்பரவு அணை திட்டம் முதல் தற்போது உள்ள குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் மூலம் அதிமுக விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை கொண்டு வருவதற்கு திமுக எம்எல்ஏ மகாராஜன் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் இந்த திட்டம் குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து வந்தனர். இந்த திட்டம் நிறைவேற்றுவதற்கு திமுக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. இதற்காக எம்எல்ஏ, சட்டசபைகளிலும் திட்டத்திற்காக பேசினார். சட்டசபை மட்டுமல்லாமல் அனைத்து கூட்டத்திலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பும் இந்த திட்டத்திற்காக பேசினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதிக்காக, திட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சி எடுத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் தூரம், எவ்வளவு அளவு தண்ணீர், தண்ணீரை கடத்தும் குழாயின் விட்டம், தொழில்நுட்ப விபரம் உள்ளிட்டவை தற்போதைய விலை நிலவரப்படி தயாரிக்கப்பட்டு, ரூ.256.30 கோடியில் அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளனர்.இன்று வரை எம்பி பேசவில்லைஇந்த திட்டத்தை கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் கேட்டு கொண்டனர். ஆனால் தேர்தல் அறிக்கையில் இந்த திட்டம் பற்றி வாக்குறுதிகள் வெளியிடவில்லை. இதனால் கொந்தளித்த விவசாயிகள், பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவெடுத்தனர். அப்போது விவசாய சங்கத்தின் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆண்டிபட்டி பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த கோரி அனைவரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும், வீட்டில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.அதன்படி அனைவரும் வீட்டில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். பின்னர் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை சமாளிக்க தொடங்கினர். தொடர்ந்து முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தனர். அதன்பின் பொதுமக்கள் சமதானமாகி போராட்டத்தை கைவிட்டனர்.பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதியளித்தார். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு இந்த திட்டத்தை பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வென்ற ரவீந்திரநாத் இந்த திட்டம் பற்றி இன்று வரை பேசவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்….

You may also like

Leave a Comment

19 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi