பழநி, ஜன. 7: பழநி கோயில் நிர்வாகம் சார்பில், பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்குவதற்காக காவல்துறையிடம் 10 ஆயிரம் ஒளிரும் குச்சிகள் ஒப்படைக்கப்பட்டன.திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் 19ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்கும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், காவல்துறை சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு இரவு நேரங்களில் ஒளிரும் குச்சிகள் மற்றும் பட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவைகளை பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் காவல்துறைக்கு இலவசமாக வழங்கும். இந்த ஒளிரும் குச்சி, பட்டைகள் பக்தர்களிடம் திரும்ப பெறப்பட்டு சுழற்சி முறையில் மீண்டும் பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில், பழநி கோயில் நிர்வாகம் சார்பில், 10 ஆயிரம் ஒளிரும் குச்சி மற்றும் பட்டைகள் காவல்துறையிடம் நேற்று வழங்கப்பட்டன. பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் வழங்கினார். இதில் கோயில் உதவி ஆணையர் லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.