பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் கிராமத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி உடனடியாக சரி செய்ய கோரிக்கை எடுத்துள்ளனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் கிராமத்தில் சாலை கடக்கும் இடத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அதுமட்டுமல்லாமல் இங்கு தனியார் தொழிற்சாலை பணிபுரியும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெரம்பலூரில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள விஜயகோபாலபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இறங்கி மேற்கு புறத்தில் உள்ள ஊருக்குள் செல்ல அச்சத்துடன் சாலையை கடக்கின்றன. இந்த விளக்குகள் எரியாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடமாக மாற வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.