சென்னை: பழைய சாதம் சாப்பிடுவது தவறில்லை. எனினும் மனிதர்கள் உணவு, நேரம் ஆகியவற்றை வீணாக்காமல் அதை பயன்படுத்த வேண்டும் என்று இருளர் இன பெண்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று காலை திருப்போரூர் ஒன்றியத்தில் நடைபெறும் அரசின் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய் வந்தார். கோவளம் கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பொழுது போக்குப் பூங்கா, உணவகம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். பின்னர், திருப்போரூர் செம்பாக்கத்தில் இருளர் பழங்குடி மக்களின் குடியிருப்பை ஆய்வு செய்தார். அப்போது இருளர் இன பெண்கள் தலைமை செயலாளர் இறையன்புவிடம் கூறியதாவது, நாங்கள் முன்பு திருப்போரூர் பகுதியில் மின்சாரம் இல்லாத குடிசை வீட்டில் வசித்தோம். இப்போது, தளம் போட்ட வீட்டில் வசதியாக வாழ்கிறோம் என்று கூறி அழுதனர். மேலும் அவர்கள் கூறும்போது, உணவை வீணாக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் பழைய சாதம் சாப்பிட்டோம். எப்போதாவதுதான் இட்லி, தோசை சாப்பிடுவோம் என்று அவர்கள் கூறினர். அதற்கு தலைமை செயலாளர் இறையன்பு, ‘‘புதிய வீடு வசதியாக தானே உள்ளது அழக்கூடாது. அப்புறம், உணவு, நேரம், மனிதர்கள் இதை எப்போதும் நாம் வீணாக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் வீட்டின் முன்பும் முருங்கை மரம், தக்காளி செடி நடுங்கள். இருளர் மகளிரை ஒருங்கிணைத்து சுய உதவிக் குழு ஆரம்பிக்க வேண்டும் என்றார்….