புதுக்கோட்டை, ஜன.26: புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பராமரிக்கப்பட்டுவரும் தர்பார் கணக்குகள் பதிவேடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1801 முதல் 1946ஆம் வருடம் வரையிலான தர்பார் ஆவணங்களும், பழைய திவான் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த முக்கிய ஆவணங்களும், நிலமெடுப்பு தொடர்பான ஆவணங்கள், புதுக்கோட்டை மாவட்டம் தொடர்பான அரசிதழ்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் அனைத்தும் புதுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பழைய ஆவணங்களை சேதமடையாத வகையில் பாதுகாப்பான முறையில் பராமரிப்பதற்கும், பழைய ஆவணங்களை எண்முறை (டிஜிட்டல்) மயமாக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, அறிவுறுத்தினார். ஆய்வின்போது, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பிரகாஷ், தாசில்தார் கவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.