பழநி, பிப்.20: பழநி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 9 கடைகளுக்கு உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். பழநி பகுதியில் உள்ள கடைகளில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சரவணக்குமார், செல்லத்துரை மற்றும் ஜஸ்டின் அமல்ராஜ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பழநி அருகே நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, வயலூர், கோதைமங்கலம் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 9 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இக்கடைகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் 2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இக்கடைகளில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3.5 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.