பழநி, நவ. 9: பழநி அருகே தாமரைக்குளம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் சுரேஷ் தலைமை வகித்தார். முகாமில் 1,321 கால்நடைகளுக்கு சிகிச்சை செய்யப்பட்டது. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 300 மாடுகளுக்கு 4ம் சுற்று கோமாரி தடுப்பூசி போடப்பட்டது. 300 ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி தடுப்பூசி, 200 கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முகாமில் சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட 3 கிடாரி கன்றுகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் விவசாயிகள் கடன் அட்டை தொடர்பான விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இதில் ஆவின் மேலாளர் டாக்டர் உதயநிதி, பாலசமுத்திரம் கால்நடை உதவி மருத்துவர் செல்வக்குமார், திமுக மாவட்ட விவசாய அணி தலைவர் ராமகிருஷ்ணன், தாமரைக்குளம் ஊராட்சி துணை தலைவர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.