திருப்பூர், மார்ச் 25: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பூர் மாநகரில் துணை ராணுவத்தினர் தேர்தல் விழிப்புணர்வு, மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்காக கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைப்பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வந்து வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் துணை ராணுவத்தினர் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த கொடி அணிவகுப்புற்கு கொங்குநகர் சரக உதவி கமிஷனர் அனில்குமார் தலைமை வகித்தார். வடக்கு இன்ஸ்பெக்டர் உதயகுமார், வேலம்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி மற்றும் 53 துணை ராணுவத்தினர் உள்பட 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பு எம்எஸ் நகரில் தொடங்கி கொடிக்கம்பம், கட்டபொம்மன் நகர், பப்பநாயக்கன்பாளையம், கோல்டன் நகர், மண்ணரை வழியாக சென்று பாளையக்காட்டில் நிறைவு பெற்றது. இந்த கொடி அணிவகுப்பை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.