கோவில்பட்டி, ஆக. 26: கோவில்பட்டி வட்டார வள மையத்தில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி சம்பந்தமான தலைமையாசிரியர் கூட்டம் நடந்தது. மாவட்ட இடைநிலைக்கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் ராஜன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் முத்தம்மாள், பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் நட்டாத்தி வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் கணக்கெடுப்பு பணி மேற்கொள்வது பற்றியும், உரிய செயலியில் பதிவு செய்வது குறித்தும் பேசினார்.
கூட்டத்தில் வெவ்வேறு காரணங்களால் பள்ளிக்கு வருகைதராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு மேல் வருகை புரியாத மாணவர்களின் பெற்றோரை வகுப்பு ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு காரணத்தை அறிந்து மீண்டும் பள்ளிக்கு வருகைபுரிய நடவடிக்கை எடுப்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.