கரூர்: கரூர் மாவட்டத்தில் ராச்சாண்டர் திருமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் மனுநீதி முகாமில், ‘பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு’ என்ற கலெக்டரின் முத்தான திட்டத்தின் மூலம் 2022 – 23ம் கல்வியாண்டில் வாளியம்பட்டியில் இருந்து 22 பள்ளி செல்லா குழந்தைகளை அழைத்து வந்ததில், ஐந்து மாணவிகள் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றதற்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். இதுகுறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2022-23ம் கல்வியாண்டில் வாளியம்பட்டி என்ற ஆர்டி மலை ஊராட்சியை சேர்ந்த கிராமத்தில் பள்ளி செல்லாக்குழந்தைகள் அதிகம் இருப்பதை கண்டறியப்பட்டு, கரூர் கலெக்டரின் சிறப்பு கவனத்தினால், ‘பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு’ என்ற நிகழ்வின் மூலம் வாளியம்பட்டியில் இருந்து ஒரு சிறப்பு பஸ்சும், அந்த கிராமத்தில் இருந்து விடப்பட்டு, அங்கிருந்து மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர் அடங்கிய குழுக்கள் மூலம் 22 மாணவிகள் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, ராச்சாண்டார் திருமலைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில், 5 மாணவிகள், 10ம் வகுப்பில் படித்து 2023 பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். 500க்கு 458 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மூன்று மாணவிகளுக்கும் கேடயம் வழங்கி பாராட்டப்பட்டது. இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி மாணவிகளுக்கு கல்வி புகட்டிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். 500க்கு 458 மதிப்பெண்களை மாணவிகள் பூர்ணா, பவ்யா, பிரியதர்ஷினி ஆகியோர் பெற்றனர். வாளியம்பட்டி என்ற கிராமத்தில் இருந்து ‘பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு’ என்ற நிகழ்வின் மூலம் 2022-23ம் கல்வியாண்டில் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு 10ம் வகுப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் காவியா (364), நித்யா (216), பரீனா (319), மீனாலட்சுமி (347), லோகேஸ்வரி (360) ஆகியோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.