சிவகாசி, ஆக. 13: பள்ளபட்டி ஊராட்சிக்கு வாசன் எம்பி தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.10லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் பேரூராட்சிக்கு இணையாக மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக பள்ளப்பட்டி ஊராட்சி உள்ளது. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில், ஒன்றிய, மாநில அரசின் நிதி மூலம் ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஊராட்சியில் முத்தாட்சி மடம் பகுதியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
பொது மக்களின் கோரிக்கையை ராஜ்யசபா எம்பி வாசன் கவனத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன் கொண்டு சென்றார். அதன் பெயரில் வாசன் ராஜ்யசபா எம்பி தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் பள்ளபட்டி ஊராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் முத்தாட்சி மடத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேகக் தொட்டி கட்டப்பட உள்ளது. இந்த தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்படுவதன் மூலம் சுமார் ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் என்று ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன் தெரிவித்தார். தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.