செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, திம்மாவரத்தை சேர்ந்தவர் குழந்தை இயேசு. இவருக்கு இரண்டரை வயதில் ஆல்வின் ஆன்டோ என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் மாலை குழந்தை ஆல்வின் ஆன்டோ, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் கட்டிட பணிக்காக பெரிய பள்ளம் தோண்டி, பில்லர் அமைக்க, பெரியபெரிய கூர்மையான இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு இருந்தன. குழந்தை ஆல்வின் ஆன்டோ, விளையாடும்போது, திடீரென அந்த பள்ளத்தில் தவறி விழுந்தது. அதில், குழந்தையின் முதுகில் குத்திய இரும்பு கம்பி, வாய் வழியாக வெளியே வந்தது.இதற்கிடையில், குழந்தையை காணாமல், பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் எந்த தகவலும் இல்லை. அப்போது, புதிதாக கட்டிடம் கட்டப்படும் பள்ளத்தில் இருந்து குழந்தையின் கதறல் சத்தம் கேட்டது. உடனே அங்கு சென்று பார்த்தபோது, கம்பியில் குழந்தை உடல் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே குழந்தையை மீட்க முயன்றபோது, முடியாமல் போனது. இதனால் கதறி அழுதனர். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பரத், மருத்துவ உதவியாளர் ஜெனிஷா ஆகியோர் தீவிர முயற்சி செய்து குழந்தையின் முதுகில் குத்தியிருந்த இரும்பு கம்பியை இயந்திரத்தின் மூலம் வெட்டி அகற்றினர். பின்னர், குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து, முதுகில் குத்தி வாய்வழியாக நீட்டி கொண்டிருந்த இரும்பு கம்பியை, அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். தொடர்ந்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர்களின் தீவிர சிகிச்சையால், அக்குழந்தை ஆபத்து கட்டத்தை தாண்டியது. ஆனாலும், குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது….