பல்லடம்,ஏப்.21: பல்லடத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொன்காளியம்மன் கோவிலுக்கு ஏற்கனவே திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டு, பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. கடை வீதி மாகாளியம்மன், செல்வவிநாயகர், பாலதண்டாயுதபாணி கோவில்களுக்கான திருப்பணி கமிட்டி அமைத்து பணிகளை துவங்குவதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.திருப்பணி நடைபெற உள்ளதால், கோவில்களுக்கு சொந்தமான கடைகளை இடித்து அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இங்கு வாடகைக்கு உள்ள சிலர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
கடைகளை இடித்து அகற்றினால் மட்டுமே, திருப்பணி முழுமை பெறும் என்பதால் அறநிலையத்துறை கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் கோயில் திருப்பணி சிறப்பான முறையில் நடைபெற வேண்டும் என்று கருதிய சிலர் தாங்களே முன்வந்து கடைகளை காலி செய்துள்ளனர். மேலும் சிலர் காலி செய்ய திட்டமிட்டு வேறு இடம் பார்த்து வருகின்றனர். திருப்பணி நிறைவடைந்ததும், புதிதாக கட்டடங்கள், கடைகள் கட்டி வாடகைக்கு விடுவதால், அறநிலையத் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.