பல்லடம், நவ.8:பல்லடம் செட்டிபாளையம் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 46 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுளது. பல்லடத்தில் செட்டிபாளையம் சாலையில் இயங்கி வரும் அரசு மதுபான கடை எண் 1830 பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த கடையை அகற்றக்கோரி கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி அன்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 26 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் உட்பட 46 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.