சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 6ம்தேதி அன்றுதான் நடந்து முடிந்திருக்கிறது. ஆட்சி மாற்றத்திற்கான சூழலை இந்த தேர்தல் உருவாக்கி இருக்கின்ற நல்ல தருணம் இது. வாக்குப்பதிவு நடந்த அன்றோ, அடுத்த நாளோ வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு இருந்தால், இந்நேரம், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பதவி ஏற்றிருக்கும். ஆனால் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சுமார் ஒருமாத காலம் இடைவெளி இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது தான் மரபு. புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பொறுப்பைப் பல ஆண்டுகளுக்கு ஏற்கப் போகும் துணை வேந்தரின் பெயரை ஆளுநர், அவசர அவசரமாக வெளியிட்டு இருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத் துணை வேந்தராக டாக்டர் செல்வகுமார் அறிவிக்கப்பட்டிருப்பதாகச் செய்தித்தாள்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இது போதாது என்று தென் மண்டலத் தேசியப் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்கிற்கு நியமித்து இருக்கிறது. தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவை. இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், பொறுத்தது தான் பொறுத்தீர் இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்கக் கூடாது என்பதுதான் எமது கேள்வி. முறையான துணை வேந்தர்களை நியமிக்காததால், அகில உலகப்புகழ் பெற்ற சென்னைப் பல்கலைக்கழகம் எப்படிச் சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதைப் பல்வேறு ஊடகங்கள் எடுத்துக் காட்டி இருக்கிறது. இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …