சேந்தமங்கலம், மே 6: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே புதுச்சத்திரம் பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (56). இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அண்ணாதுரை தன் மனைவியுடன் புதுச்சத்திரம், சேந்தமங்கலம் எருமப்பட்டி உள்ளிட்ட வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் நடைபெறும் வாரச்சந்தையில், பலகார கடை போட்டு நடத்தி வருகிறார். நேற்று கணவன், மனைவி இருவரும் சந்தைக்கு பலகார கடை நடத்த சென்று விட்டனர்.
மகன்கள் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில், இரவு சந்தை கடை முடிந்த பிறகு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 38 பவுன் தங்க நகை, ₹25ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.