வேலூர், மார்ச் 22: வேலூர் மக்களவை தேர்தலையொட்டி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளடக்கிய பறக்கும் படை மற்றும் நிலைய கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கும் தலா மூன்று வீதம் மொத்தம் 15 பறக்கும்படைகள் மற்றும் 15 நிலைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் மொத்தம் 180 காவல்துறை அலுவலர்கள் ஒரு ஷிப்டுக்கு 60 நபர்கள் என 3 ஷிப்ட்களில் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் 2 நாட்கள் பயிற்சி தொடங்கியது. இந்த பயிற்சி நிறைவு பெற்றது. அப்போது காவலர்கள் செயல்படும் விதம் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏடிஎஸ்பிகள் பாஸ்கரன் கோட்டீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.