பரமக்குடி, ஏப்.15: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த, விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் சித்திரைத் திருவிழா தொடங்கியது. முன்னதாக காப்பு கட்டப்பட்டது. காலை 11 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு, மாலை சுவாமி அம்பாள் வீதிவலம் வந்தனர்.
அதேபோல் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர். ஏப்.20ம் தேதி அன்று அம்பாள் தபசு திருக்கோலத்தில் அலங்காரமாகி மாலை மாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.21 காலை 11 மணிக்கு சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. மறுநாள் ஏப்.22 காலை சித்திரை திருவிழாவில் ரத வீதிகளில் தேரோட்டம் நடக்க உள்ளது. தொடர்ந்து மறுநாள் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.