பரமக்குடி,நவ.22: தமிழக முழுவதும் புதிய வாக்காளர் சேர்ப்பது குறித்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பரமக்குடி,முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் சேர்க்கும் பணி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தலைமையில் நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக, பரமக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தொடங்கி வைத்தார்.
வாக்களிப்பதின் அவசியம் குறித்து நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி பரமக்குடி ஓட்ட பாலம் பகுதியில் தொடங்கி நகரின் முக்கிய பகுதிகளான பெரிய பஜார், காந்தி சிலை, பேருந்து நிலையம், ஆற்று பாலம், வழியாக தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்களிப்பதின் அவசியம் குறித்து முழக்கங்கள் எழுப்பி சென்றனர்.
பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பேரணியில் பரமக்குடி வட்டாட்சியர் ரவி, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் முத்துராமலிங்கம், பரமக்குடி நகராட்சி தேர்தல் உதவியாளர் சுதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.