காரைக்கால்,ஏப்.16: புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு பிரதம மந்திரி பசில் பீமா யோஜனா பயிர் காப்பீட்டு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறிய மாநிலங்கள் பிரிவில் முதல் பரிசு புதுச்சேரிக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கடந்த 2016-17ம் ஆண்டு முதல் 2022-23ம் வரை விவசாயிகளில் நலனுக்காக ஒன்றிய அரசின் பிரதம மந்திரி பசில் பீமா யோஜனா என்று அழைக்கப்படும் பயிர் காப்பீடு திட்டத்தினை செம்மையாக செயல்படுத்தி வருகிறது. இதுவரை சுமார் 72,000 விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு அதில் இயற்கை பேரிடர்கள் மற்றும் மகசூல் பாதிப்பு போன்ற காரணங்களால் பாதிப்பு அடைந்தோருக்கு சுமார் 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இதுவரை 29 கோடி ரூபாய் அளவிற்கு காப்பீட்டு இழப்பாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நகரில் எதிர்வரும் 2023 காரிப் பருவத்தில் ஆரம்பித்து 2025-26ம் ஆண்டு ரபி பருவம் முடிய உள்ள காலத்திற்கு காப்பீடு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்த நடைமுறைகள் மற்றும் இழப்பீடுகளை வரையறுத்தல் போன்றவற்றை மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து இறுதி செய்திட ஒன்பதாவது தேசிய கூட்டம் நடைபெற்றது.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் செயலர் மனோஜ் அகுஜா,சத்தீஸ்கர் மாநிலத்தின் வேளாண் உற்பத்தி செயலர் டாக்டர்.கமல் பிரீத் சிங் மற்றும் பிரதம மந்திரி பசல் பீமோ யோஜனா திட்டத்தின் முதன்மை தலைமை செயல் அதிகாரி ரித்தீஷ் சவுகான் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்திற்கு சிறிய மாநிலங்களுக்கு உண்டான பிரிவில் பயிர் காப்பினை சிறப்பாக செயல்படுவதற்காக முதல் பரிசு வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசின் வேளாண் துறையின் சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட இணை வேளாண் இயக்குனர் மற்றும் பயிர் காப்பீட்டு திட்ட முதன்மை அதிகாரி ஜாகிர் பரிசை பெற்றுக் கொண்டார்.