திருவண்ணாமலை, ஜூன் 10: திருவண்ணாமலை- திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில், சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். மரம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என்ற வாசகம் கலைஞருக்கு மிகவும் விருப்பத்துக்குரியதாகும். எனவே, இயற்கையின் மீது அக்கறை கொண்ட கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என 2023-2024ம் ஆண்டு நெடுஞ்சாலைகள் துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்க நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
அதன்படி, நெடுஞ்சாலைத்துறையின் 340 சாலைகளில் மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையை சார்ந்த மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வகை மரக்கன்றுகள் 24 மாத காலம் வளர்ச்சி கொண்டவையாகும். மேலும், பருவமழைக்கு முன்பாகவே 5 லட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருவண்ணாமலை- திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் நேற்று சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். அப்போது, பயன் தரும் மரக்கன்றுகளை நட்டு அவற்றுக்கு நீர் ஊற்றினார். நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலெக்டர் முருகேஷ், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், எம்பி சி.என்.அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், துரை.வெங்கட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.