Monday, June 17, 2024
Home » பயணிகளின் நெடுநாள் கனவு நனவாகிறது… தமிழக எல்லையான குமுளியில் பஸ் நிலையம்

பயணிகளின் நெடுநாள் கனவு நனவாகிறது… தமிழக எல்லையான குமுளியில் பஸ் நிலையம்

by kannappan

கூடலூர்: மக்கள் நலனில் அக்கறை காட்டும் திமுக அரசு, அதிமுக ஆட்சியில் கனவாகிப்போன தமிழக எல்லையில் உள்ள குமுளியில் பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை நனவாக்க களமிறங்கி உள்ளது. தேனி மாவட்டத்தின் தெற்குப்பகுதியான குமுளி, கூடலூர் நகராட்சியின் 21வது வார்டு பகுதியாகவும், தமிழக – கேரள மாநிலங்களின் எல்லையாகவும் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூரு, புதுச்சேரி போன்ற இடங்களிலிருந்தும் குமுளிக்கு நாள்தோறும் வரும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் தேனி – கொல்லம் நெடுஞ்சாலையில் லோயர் கேம்ப்பிலிருந்து 6 கிமீ தூரம் பாதுகாக்கப்பட்ட, கூடலூர் வனப்பகுதியில் மலைச்சாலை வழியாக குமுளியை சென்றடைகிறது.குமுளி பாதுகாக்கப்பட்ட தமிழக வனப்பகுதிக்குள் இருப்பதால், அங்கு பஸ் நிலையம் அமைக்கவோ, பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யவோ வனத்துறை அனுமதிக்கவில்லை. கடந்த 1981ல் கட்டிய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் குமுளி கிளை பணிமனை மட்டுமே இங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு பஸ் நிலைய வசதியில்லாததால், பஸ்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்படுகின்றனர். இதனால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இதனால் இங்குள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை பஸ் நிலையமாக மாற்றி, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கடந்த அதிமுக ஆட்சியில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, குமுளியிலுள்ள தமிழக அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை பஸ் நிலையமாக மாற்றவும், அங்குள்ள பணிமனையை லோயர்கேம்ப்புக்கு மாற்றி அமைக்கவும் அரசு முடிவு செய்தது. புதிய பணிமனை அமைக்க லோயர்கேம்பில் மின்வாரியத்துக்கு சொந்தமான 3.87 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.லோயர்கேம்பில் புதிய பணிமனை கட்டிடம் கட்ட தொகுதி எம்எல்ஏ நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் அப்போது அமைச்சராக இருந்த ஓபிஎஸ் மற்றும் எம்எல்ஏ இடையே இணக்கம் இல்லாததால் ஓபிஎஸ்சை மீறி பணிகள் செய்ய அதிகாரிகள் தயங்கினர். பல்வேறு காரணங்களைச் சொல்லி 2 ஆண்டுகளுக்குமேல் பணியை கிடப்பில் போட்டனர். நீண்ட இழுபறிக்குப்பின் 2015ல் லோயர் கேம்பில் புதிய பணிமனை கட்டுமானப் பணிகள் முடித்து, குமுளியிலுள்ள பணிமனையை லோயர்கேம்புக்கு மாற்றினர். இந்த பணிமனையில் இருந்து 17 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு டிரைவர், கண்டக்டர், மெக்கானிக், அலுவலக ஊழியர்கள் என 120 பேர் பணியிலுள்ளனர்.இதையடுத்து குமுளியிலுள்ள உள்ள பணிமனையை பஸ் நிலையமாக மாற்றி, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர கூடலூர் நகராட்சி முடிவு செய்தது. ஆனால் லோயர்கேம்பில் புதிய பணிமனையில் இயங்க ஆரம்பித்த போக்குவரத்து துறை, பழைய பணிமனையை நகராட்சியிடம் ஒப்படைக்க மறுத்தது. பணிமனை இடத்திற்கும், அங்குள்ள கட்டிடத்திற்குமான தொகையை கணக்கிட்டு தரும்படி கேட்டது. இதனால் கூடலூர் நகராட்சி நிர்வாகமும் பஸ் நிலையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது. இரு துறைகளின் மோதலால் குமுளியில் பஸ் நிலையம் என்பது பயணிகளுக்கு கனவாக மாறியது. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்கும் அவலமும் தொடர்ந்தது.இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், குமுளியில் பஸ் நிலையம் அமைப்பது குறித்து, இப்பகுதி மக்கள் கம்பம் தொகுதி எம்எல்ஏவும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்தனர். எம்எல்ஏ ராமகிருஷ்ணன் துறை சார்ந்த அமைச்சரிடமும், முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் இப்பிரச்சனையை கொண்டு சென்றார். இதையடுத்து மக்கள் நலனின் அக்கறை கொண்ட முதல்வரான மு.க.ஸ்டாலின் தேனியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோது, குமுளியில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.இதைடுத்து தற்போது குமுளியில் பஸ் நிலையம் அமைக்கும் பணிக்கான முதல்கட்ட ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளன. குமுளி எல்லையில் பஸ் நிலையம் அமைந்தால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் சாலையோரம் காத்திருக்கும் அவல நிலைக்கு முடிவு கிடைக்கும். இதனால் தமிழக அரசு எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.லோயர் கேம்பில் புதிய பணிமனைக்கான கட்டிடம் கட்ட கடந்த 2013 செப். 2 மற்றும் அக். 14 என இருமுறை பூமிபூஜைக்கு நாள் குறிக்கப்பட்டது. பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ இருவருக்கும் இடையே பரஸ்பரம் ஒருங்கிணைப்பு இல்லாததால் இருமுறையும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பின் முன்றாம் முறையாக 2014 மார்ச் 5ம் தேதி பூமிபூஜை நடைபெற்றபோது தொகுதி அமைச்சரான ஓ.பன்னீர்செல்வமோ, போக்குவரத்துத்துறை அதிகாரிகளோ கலந்து கொள்ளவில்லை. இதனால் குமுளியில் பஸ் நிலையம் என்பது கனவாகிவிடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தனர் இப்பகுதி மக்கள்.அடிப்படை வசதிகள் இல்லைகுமுளியில் பஸ் நிலையம் அமைப்பதன் அவசியம் குறித்து கம்பத்தை சேர்ந்த ஏலக்காய் விவசாயி மணி கூறியதாவது: என்னைப்போன்ற விவசாயிகள் வாரத்தில் 5 நாட்களுக்குமேல் கேரளா சென்று திரும்புகிறோம். தமிழக எல்லை வனப்பகுதி என்பதால் மக்களுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யமுடியாமல் இருந்தது. நமது எல்லைப்பகுதியிலிருந்து ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ள கேரளப்பகுதிக்குள் பஸ் நிலையம், கழிப்பறைகள், ஓட்டல்கள் என எல்லா வசதியும் உண்டு. சுற்றுலாத்தலமான தேக்கடிக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பல்வேறு மாநில பக்தர்களும், இருமாநில எல்லைப்பகுதியில் தமிழகப்பகுதியின் நிலையை பரிதாபத்துடன் கண்டு சென்றனர். தற்போது திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குமுளியில் பஸ் நிலையம் அமைக்க உத்தரவிட்டு தற்போது முதற்கட்ட பணிகள் தொடங்கியதால் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.ரூ.3 கோடியில் திட்டம்கூடலூர் நகராட்சி சார்பில், கடந்த 2016ல் குமுளியில் புது பஸ் நிலையம் அமைத்து, கீழ்தளத்தில் கடைகள், மேல்தளத்தில் பயணிகள் தங்கும் அறைகள் கட்டுவதற்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்துறை இடத்தை ஒப்படைக்காததால் அத்திட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

seven + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi