பந்தலூர்,ஏப்.13: பந்தலூரில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம்,பந்தலூர் பஜாரில் நேற்று இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி எதிர்வரும் 19 ஆம் தேதி சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது பாராளுமன்றத் தொகுதியில் 100% வாக்குப்பதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்டிட அழைக்கின்றோம்.
நூறு சதவீதம் வாக்குப்பதிவு நமது இலக்கு என துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். ஓட்டு போடுங்க நோட்டு வாங்காதீங்க என பதாதைகள் ஏந்தி பந்தலூர் பஜாரில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் ஸ்கூட்டர் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆவின் பொது மேலாளரும், மாவட்ட தேர்தல் வழிகாட்டி விழிப்புணர்வு பொறுப்பு அலுவர் ஜெயராமன் தலைமை வகித்தார். விழிப்புணர்வு பேரணி பந்தலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் துவங்கி பஜார் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்றது. 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் திட்ட நிர்வாகிகள் ,மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.