மதுரை, மார்ச் 26: மதுரை மாவட்ட கலெக்டர் தலைமையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடர்பாக போலீசார், மின்சார வாரியம், போக்குவரத்து துறை, கல்வி துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. மதுரை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் நாகராஜ முருகன் அறிவுரைகளின்படி முதன்மை கண்காணிப்பாளர்கள்.
கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை நிலையான படை உறுப்பினர்கள், அனைத்து ஆய்வு அலுவலர்கள் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கி தேர்வு பணிகள் எவ்வித இடர்பாடுமின்றி சிறப்புடன் நடைபெற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை 488 பள்ளிகளை சார்ந்த மாணவிகள் 18,970, மாணவர்கள் 19,419 என 38,389 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
இம்மாணவ, மாணவியர்கள் 145 தேர்வு மையங்களில் இத்தேர்வுகளை எழுதுகின்றனர். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு பணிக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள் என மொத்தம் 3,282 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படை 10 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு இத்தேர்வினை கண்காணிக்க உள்ளனர். இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் 376 மாணவர்களுக்கு ‘சொல்வதை எழுதுபவர்கள்’ நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தனித்தேர்வர்கள் 855 பேர் தேர்வெழுதவுள்ளனர். மேலும் சிறை கைதிகள் 3 பெண்கள். 52 ஆண்கள் உள்ளிட்ட 55 பேரும் தேர்வெழுதுகின்றனர். இன்று (மார்ச் 26) துவங்கும் தேர்வுகள், ஏப்.8ம் தேதி வரை நடக்கிறது.