திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டுமான கழகம் மூலம் 3 மாத திறன் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கொத்தனார், பற்ற வைப்பவர்கள், மின்சார வேலை, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர்கள் உட்பட பல தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமான கழகம் மூலம் 3 மாத திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ படித்து 18 முதல் 40 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம், உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். பயிற்சி பெறுவோருக்கு எல்அன்ட்டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். ஒருவார கால திறன் பயிற்சியில், 18 வயதுக்கு மேல் உள்ளவர் பங்கேற்கலாம். ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தினமும், ரூ 800 வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு, திருவாரூர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை நேரிலோ அல்லது 04366-251210 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தர் தெரிவித்துள்ளார்.