புவனகிரி, ஆக. 2: புவனகிரி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றிய 17 பேர் நேற்று முதல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நேற்று புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சதானந்தம் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து புவனகிரி வட்டாட்சியர் சிவகுமார், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பணி நீக்கம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.