புதுடெல்லி: பணவீக்கம் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்தன.மக்களவையில் நேற்று மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய திரிணாமுல் காங்கிரசின் சவுகதா ராய், ‘ நாட்டின் பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்க அரசுக்கு வேறு தீர்வுகள் தேவைப்படும். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதை ரிசர்வ் வங்கியிடம் மட்டும் விட்டுவிட்டோமா? அல்லது பணவீக்கம் பற்றி அரசு ஏதாவது சொல்ல வேண்டுமா? உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும்’ என்று பேசினார்.இதை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்பி கே.சுரேஷ் கூறுகையில்,’ இலக்குகளை அரசால் அடையமுடியவில்லை. வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளன. நகர்ப்புறங்களில் கூட இப்போது வேலைகள் இல்லை. நாங்கள் பொறாமைப்படுவதில்லை. நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு தவறிவிட்டது’ என்று விமர்சனம் செய்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி பி.பி பைசல் கூறுகையில்,’ பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கொரோனா தொற்று ஆகியவை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதித்துள்ளது’ என்றார். பிஜூ ஜனதாதளம் கட்சியின் சர்மிஸ்தா சேதி கூறுகையில்,’ அதிக வேலையின்மை, குறைந்த தனியார் துறை முதலீடு, அதிக உணவுப் பணவீக்கம் ஆகியவை மக்களைப் பாதிக்கின்றன’ என்றார்.தெலங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி ரேவந்த் ரெட்டி, ‘1947 முதல் 2014 வரை ரூ.55.87 லட்சம் கோடிக்கு இந்தியா கடன் வாங்கியுள்ளது. ஆனால் மோடி அரசு வந்தபிறகு ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது. இந்த அரசு நாட்டை முழுவதுமாக சீரழித்துவிட்டது’ என்று குற்றம் சாட்டினார்….