பணகுடி, ஏப்.17: பணகுடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறிய அளவிலான நிலங்களை பதிவு செய்ய மறுப்பதுடன் பொதுமக்களை அலைக்கழிப்பதால் பாதிக்கப்படுகின்றனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி சார்பதிவாளர் அலுவலகத்தில் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இங்கு தினமும் குறைந்தது 10 முதல் 50 பத்திரங்கள் வரை பதிவு செய்ய வருகின்றனர். ஆனால், பத்திரங்கள் பதிவு செய்ய மறுப்பதாக தெரிகிறது. பணகுடி பகுதியை சுற்றியுள்ள கிராமத்தினர் தங்களுக்கு இருக்கும் வசதிக்கு ஏற்ப சிறிய அளவிலான நிலங்களை தங்கள் பிள்ளைகளுக்கு எழுதி கொடுக்க சென்றால் பத்திரம் பதிவு செய்ய மறுக்கின்றனர்.
அதே நேரத்தில் பெரிய அளவிலான பத்திரங்கள் என்றால் உடனடியாக பதிவு செய்து கொடுக்கினறனர். இதனால், பொதுமக்கள் சொல்லண்ணா துயரத்தில் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக பதிவுத்துறை டிஐஜி அலுவலகத்துக்கு புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சிறிய அளவிலான பத்திரங்கள் இன்றளவு பதிவு செய்யப்படாமல் மறுக்கப்படுகின்றனர். இதனால், பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பித்தும் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பணகுடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சமீப காலமாக சிறு நிலங்கள் அல்லது சிறு வீட்டு மனை வைத்திருப்பவர்கள் பத்திரம் போட முடியாத நிலை தான் உள்ளது இது தொடர்பாக பணகுடி பகுதி சமூக ஆர்வலர்கள் பலமுறை சார் பதிவாளரிடம் முறையிட்டும் பதில் இல்லை. உயர் அதிகாரியிடம் புகார் அளித்து பத்திரம் பதிவு செய்ய முடியாத நிலை தான் உள்ளது. இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சிறிய அளவிலான நிலங்களை பதிவு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.