Wednesday, June 5, 2024
Home » படியில் தொங்கியதை தட்டிக்கேட்டதால் பஸ் கண்டக்டரின் மண்டை உடைப்பு: புதுக்கல்லூரி மாணவர்கள் 4 பேரிடம் விசாரணை

படியில் தொங்கியதை தட்டிக்கேட்டதால் பஸ் கண்டக்டரின் மண்டை உடைப்பு: புதுக்கல்லூரி மாணவர்கள் 4 பேரிடம் விசாரணை

by kannappan

சென்னை: படியில் தொங்கியதை தட்டிக்கேட்ட மாநகர பேருந்து கண்டக்டரின் மண்டையை உடைத்தத புதுக்கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மந்தைவெளியில் இருந்து பாரிமுனை நோக்கி நேற்று மதியம் (தடம் எண் 21) மாநகர பேருந்து புறப்பட்டது. ராயப்பேட்டை மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், புதுக்கல்லூரி மாணவர்கள் பலர் பேருந்தில் ஏறியுள்ளனர். பல்லவன் இல்லம் அருகே பேருந்து சென்றபோது, புதுக்கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தில் இடம் இருந்தும், படிக்கட்டில் தொங்கியபடி ஆட்டம் போட்டுள்ளனர். இதை பார்த்த பேருந்து கண்டக்டர் ஜெரின், இதுபோல் செய்ய கூடாது என்று மாணவர்களிடம் கூறியுள்ளார். ஆனாலும், அவர்கள் படியில் தொங்கியபடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பேருந்தை ஓரமாக நிறுத்துமாறு டிரைவர் சங்கரிடம் கண்டக்டர் கூறியுள்ளார். அதன்படி டிரைவர் பேருந்தை சாலையோரம் நிறுத்தியுள்ளார். இதனால், படியில் தொங்கி வந்த மாணவர்கள், கண்டக்டர் ஜெரினிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவர்கள் கண்டக்டரை தாக்கி, மண்டையை உடைத்துள்ளனர். இதில் ரத்தம் வழிந்தபடி அவர் அலறி கூச்சலிட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பல்லவன் இல்லம் அருகே இந்த சம்பவம் நடந்ததால் போக்குவரத்து பணிமனையில் இருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் திரண்டு, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்து தொழிலாளர்களிடம், தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. பிறகு படுகாயமடைந்த கண்டக்டர் ஜெரின் அளித்த புகாரின்பேரில், தாக்குதல் நடத்திய 4 புதுக்கல்லூரி மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த கண்டக்டர் ஜெரின், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….

You may also like

Leave a Comment

three × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi