திருவாரூர், நவ. 29: திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவிதொகை பெற நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006 -ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். அதன்படி கடந்த மாதம் 30ந் தேதியுடன் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். உதவித்தொகை கோரும் விண்ணப்பதாரர்கள் உதவிதொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது.
ஆயினும் தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். எனவே திருவாரூர் மாவட்டத்தில் தகுதியுடை விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பத்தை https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் இணைத்து நாளைக்குள் (30ம் தேதி) திருவாரூர் விளமலில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.