விருதுநகர், ஜன.14: விருதுநகர் நோபிள் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், பள்ளி செயலர் வெர்ஜின் இனிகோ தலைமை வகித்தனர். பள்ளி துணைத்தலைவர் நிஜிஷ் முன்னிலை வகித்தார்.பள்ளி தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம் பொங்கல் விழாவின் சிறப்புகளையும், தமிழர்களின் பாரம்பரியத்தையும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
அதை தொடர்ந்து நடைபெற்ற சிலம்பம், வாள், சுருள் வாள் சுற்றுதல், கயிறு இழுத்தல் போட்டிகளில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். பெற்றோர்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது. பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் ஆசிரியைகள், மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.