நெல்லை: நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரத்தில் ஈரடுக்கு துவங்கும் பகுதியில் பராமரிப்பின்றி பாழான சாலையில் உருவான ராட்சத பள்ளத்தால் வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக வேகமாக வரும் ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்கள் சிக்கித் தடுமாறுவதால் இதை விரைவில் சீரமைக்கவேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றன. நெல்லை மாநகரில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உள்ளது. இதனால் குறைந்த அளவிலான வாகன போக்குவரத்தே உள்ளது. எனவே, இதை வாய்ப்பாக பயன்படுத்தி மாநகர பகுதியில் பராமரிப்பின்றி பாழான மற்றும் சேதமடைந்த சாலைகளை துரிதமாகச் சீரமைப்பது மிகவும் அவசியமாகும். குறிப்பாக ஆசிய அளவில் புகழ் பெற்ற நெல்லை சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தில் ஸ்ரீபுரம் அருகே துவங்கும் பகுதியில் பராமரிப்பின்றி பாழான சாலையில் ஏராளமான ராட்சத பள்ளங்கள் அதிக அளவில் உருவாகி உள்ளன. குறிப்பாக இங்கு பாலம் தொடங்கும் பகுதியில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இதனால் இப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் இரவில் மட்டுமின்றி பகலில் கூட தடுமாறும் அவலம் தொடர்கிறது.குறிப்பாக தற்போது கொரோனா நோயாளிகளையும் பிற நோயாளிகளையும் ஏற்றிச்செல்லும் ஆம்புலன்சுகள் அதிக அளவில் இப்பகுதியை கடக்கின்றன. அதிவேகமாக வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்த பள்ளங்களில் சிக்கித் தடுமாறுகின்றன. இதனால் உள்ளே இருக்கும் நோயாளிகளும் அவதிப்படுகின்றனர். இரவில் இந்த பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளில் கண்களுக்கு கடைசி நேரத்தில் தென்படுவதால் விபத்துக்களும் நடக்கின்றன. எனவே பாலத்தின் தொடக்கத்தில் உள்ள இந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்கவேண்டும் என்பதே வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் எதிர்பார்ப்பாகும்….