தமிழகத்தின் 3வது பெரியதேர் என்ற பெருமையுடைய சுவாமி நெல்லையப்பர் தேர் உள்ளிட்ட 5 தேர்கள் இக்கோயிலில் உள்ளன. 500 ஆண்டுகளுக்கு மேல் (கொரோனா காலம் தவிர்த்து) தொடர்ந்து 5 தேர்கள் தங்குதடையின்றி பக்தர்கள் மூலம் வடம் பிடித்து இழுக்கப்படுகிற பெருமையும் இக்கோயிலுக்கு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆனித்தேரோட்டத்தின் போது தேர்களுக்கு முன்பாக பீமன் ,அலங்கரிக்கப்பட்ட காந்திமதி யானை, சிவனடியார்கள் பஞ்ச வாத்தியம் முழங்கவும் அலங்கார பொம்மைகளுடன் கூடிய மரக்கப்பலும் ரதவீதி வலம் வருவது வழக்கமாக இருந்தது. காலபோக்கில் மரக்கப்பல் பழுதாகி சக்கரங்கள் சேதமடைந்து ஓரங்கட்டப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை பழுதுபார்த்து சீரமைத்து தேரோட்ட திருவிழாவில் ரதவீதிகளில் உலா வர செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அறநிலையத்துறை நடவடிக்கையின் பேரில் மரக்கப்பல் ரூ.2.50 லட்சம் செலவில் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து மரக்கப்பலை சுற்றிலும் சுவாமி நெல்லையப்பர் தோன்றிய வரலாறு கட்சி படுத்தப்பட்டுள்ளது. அதில் மூங்கில் காட்டில் நெல்லையப்பர் தோன்றியது. நெல்லுக்கு வேலியிட்டு காத்து திருநெல்வேலி என பெயர்வர காரணமாக அமைந்த வரலாறு, ராமகோன், மன்னருக்கு 9 அடுக்குகளில் ஆவுடையுடன் நெல்லையப்பர் காட்சியளிப்பது உள்ளிட்டவை பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் ஓவியமாக வரைப்பட்டு வருகின்றன.