நெல்லை, டிச.17: நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை திருவனந்தல் சிறப்பு வழிபாடு நேற்று அதிகாலை பைரவர் பூஜையுடன் நிறைவடைந்தது. நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை மாதம் முழுவதும் திருவனந்தல் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. இதையொட்டி சுவாமி தங்க பல்லக்கில் தினமும் திருவனந்தல் எழும் சிறப்பு வழிபாடு காரத்திகை மாதம் முழுவதும் நடைபெற்றது. இதைதொடர்ந்து கார்த்திகை மாதம் முடிவடைவதை தொடர்ந்து கடந்த 15ம் தேதி இரவு சுவாமி தங்க பல்லக்கில் புஷ்ப அலங்காரத்துடன் பள்ளியறைக்கு எழுந்தருளும் வழிபாடு நடந்தது.
இதைதொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு திருவனந்தல் பூஜை நிறைவையொட்டி பைரவர் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் பைரவருக்கு வடைமாலை சாற்றப்பட்டு உள்பிரகாரம் வலம் வருதலும் நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பைரவர் பிரகாரம் வலம் வருதல் நடந்தது. இத்தகைய கார்த்திகை மாத திருவனந்தல் சிறப்பு வழிபாடு நெல்லையப்பர் கோயிலில் மட்டும் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதாக பக்தர்கள் கூறினர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.