நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நகர வளர்ச்சி குறித்த கலந்தாய்வு கூட்டம் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, நகரமன்ற துணைத்தலைவர் கிரிஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேல்முருகன் எம்எல்ஏ பேசியதாவது: வரும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மழைக்காலத்தில் ஏற்படும் பேரிழப்புகளை சரி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வெல்லப்பாகத்தான் வாய்க்கால், நெல்லிக்குப்பத்தான் வாய்க்கால் உள்ளிட்ட நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் மின் கம்பிகளால் கால்நடை மற்றும் பொதுமக்கள் உயிர் இழப்பீடு ஏற்படாத வண்ணம் பாதுகாத்திட வேண்டும். மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை சேமித்து வைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியிலிருந்து நகர மக்களுக்கு பாரபட்சம் இன்றி பகிர்ந்து அடிப்படை வசதிகள் செய் தரப்படும் என கூறினார். அரசு அனுமதியில்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர முடியவில்லை என நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தெரிவித்தார். அரசு அனுமதி இல்லாத பகுதிகள் குறித்து மனுக்களாக கொடுங்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி அனுமதி இல்லாத பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ தெரிவித்தார். அதனை தொடர்ந்து கவுன்சிலர்களிடமிருந்து மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தரம் குறித்து வேல்முருகன் எம்எல்ஏ, சேர்மன் ஜெயந்தி, துணை சேர்மன் கிரிஜா மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பள்ளியில் பயிலும் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில போதுமான வகுப்பறை இல்லாததும், ஆய்வுக்கூடங்கள் இல்லாததும் தெரிய வந்தது. மேலும் பள்ளியில் பாதுகாப்பான சுற்றுச்சுவர் இல்லாமல் பள்ளி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதும் தெரியவந்தது. அதன்பேரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடங்கள் கட்டவும், ஆய்வுக்கூடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கவும் உடனடியாக நிதி பெற்று பணிகள் தொடங்கப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தார். இதனை கேட்ட பள்ளி தலைமை ஆசிரியர் தரணிதரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். …