தர்மபுரி: தர்மபுரி அருகே, தடுப்பணை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள் நெற்பயிர்களுடன் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் முனியப்பன்(37), நந்தகுமார்(30). இருவரும் கையில் நெற்பயிர்களுடன், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பிற்கு இருந்த போலீசார், அவர்களிடம் இருந்த நெற்பயிர்களை பறிமுதல் செய்து, மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இருவரும் கலெக்டர் சாந்தியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பென்னாகரம் அருகே உள்ள புதுப்பட்டி வரகூரான் கொட்டாய் கிராமத்தில், ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி செல்லும் வழியில், தடுப்பணை இருந்தது.
அந்த தடுப்பணையில் மழை காலங்களில் தண்ணீர் நிரம்பும் போது, சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது. மேலும், சுற்றுப்பகுதிகளிலுள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இந்த தடுப்பணை மற்றும் தடுப்பணை கால்வாய்களை, அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உடைத்து சேதப்படுத்தி, ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்கான நீராதாரம் கேள்விக்குறியாகி விட்டது. எனவே, தடுப்பணை மற்றும் தடுப்பணை கால்வாய்களை உடைத்து, ஆக்கிரமித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, விவசாயிகள் பயன் பெறும் வகையில் மீண்டும் தடுப்பணையை கட்டித்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.