நெட்டப்பாக்கம், செப். 11: புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் மணிமாறன் என்ற டூம் மணி (32). ரவுடியான இவர் 2020ல் முத்தியால்பேட்டை அன்புரஜினி கொலையில் சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் உயிர் பாதுகாப்பு கருதி மடுகரையில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது அவரை ஒரு கும்பல் ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. இதுதொடர்பாக நெட்டப்பாக்கம் காவல்துறை வழக்குபதிந்து விசாரித்தது. அப்போது அன்பு ரஜினி கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்தது தெரியவரவே, குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் நடந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து கார் நம்பர்களை கொண்டு துப்பு
துலங்கினர்.
அதன்படி சிவராஜ், வினோதன், தர்மா, விஸ்டம், சங்கர் உள்ளிட்ட 5 பேர் கும்பலை தனிப்படை வலைவீசி தேடிய நிலையில் தீவனூர் அருகே சுற்றிவளைத்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். மணி கொலைக்கான காரணம் என்ன, இதன் பின்னணியில் யார், யார் உள்ளனர்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் திடுக் தகவல் அம்பலமானது. அதாவது புதுச்சேரி, சாரம் பகுதியைச் சேர்ந்த உஷா என்ற இளவரசி (34) என்பவர் கொலை கும்பலுக்கு ஆயுதங்களை சப்ளை செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து கொலையில் அப்பெண்ணுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை திரட்டிய போலீசார் அவரை நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.