கம்பம்: நீர்வரத்து குறைந்ததால், சுருளி அருவியில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். கடந்த சில நாட்களாக சுருளி அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை நீரோடைகளில் அதிக அளவு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 3 நாட்களாக பொதுமக்கள் சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் அருவிக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் நேற்று முதல் சுருளி அருவியில் பொதுமக்கள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்….