ஊத்தங்கரை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரித்தனர். நீதிமன்ற புறக்கணிப்பால் பணிகள் பாதிக்கப்பட்டது. இலங்கை போரில், தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 2009 பிப்ரவரி 19ம்தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 19ம்தேதியை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக கடைபிடிக்கின்றனர். நேற்று ஊத்தங்கரை நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரித்து பணிகளை புறக்கணித்தனர்.