திருமங்கலம் : நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற திருமங்கலத்தை சேர்ந்த மாணவி, தனியார் ஓமியோபதி கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான சீட் கிடைத்தும் வறுமை காரணமாக பணம் கட்ட முடியாமல் தவித்து வருகிறார்.மதுரை மாவட்டம், திருமங்கலம், மேலக்கோட்டை ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் கணேசன். 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவி அமுதா. மகள் கிருத்திகா, மகன் மணிகண்டன். கணவரை இழந்த நிலையில் கூலி வேலைக்கு சென்று வந்த அமுதாவுக்கு, சில மாதங்களுக்கு முன் அங்கன்வாடியில் வேலை கிடைத்தது. மேலக்கோட்டை அரசுப்பள்ளியில் பிளஸ் 2 வரை படித்த மகள் கிருத்திகாவுக்கு, சிறுவயதில் இருந்து மருத்துவ படிப்பு படிக்க ஆசை. இதையடுத்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். கலந்தாய்வில் ஈரோடு அருகே உள்ள தனியார் ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது.கல்லூரியில் சேர ரூ.2.35 லட்சம் பணம் கட்டவேண்டிய நிலையில், கிருத்திகா ரூ.30 ஆயிரம் மட்டுமே கட்டி தனது மருத்துவ படிப்பிற்கான சீட்டை உறுதி செய்துள்ளார். ஏழ்மையான குடும்ப சூழலில் மீதமுள்ள பணத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் இவரது குடும்பத்தினர் திணறி வருகின்றனர். மாணவி கிருத்திகா கூறுகையில், ‘‘நோயால் தந்தையை இழந்த எனக்கு, நோயால் அவதிப்படும் மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறுவயது முதலே இருந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற எனக்கு தனியார் ஓமியோபதி கல்லூரியில் இடம் கிடைத்தது. வறுமை சூழலால் பணத்தை கட்ட முடியவில்லை. இந்த மாத இறுதிக்குள் முழுத்தொகையையும் கட்ட கூறியுள்ளனர். எனது மருத்துவப்படிப்பு கனவாகாமல் தொடர உதவி செய்ய வேண்டும்’’ என்றார்….