நீடாமங்கலம், மார்ச் 19: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடி தொடர்ந்து செய்து வருகின்றனர். அறுவடை செய்யும் நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பணை செய்கின்றனர். விற்பணை செய்த நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து அருகில் உள்ள திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள், நவீன அரிசி ஆலை சுந்தரக்கோட்டை, மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி ஆகிய இடங்களில் சேமித்து வைத்து, பிறகு அங்கிருந்து லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து ரயில் வேகன்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அதேபோல தனியார் முகவர்களிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரசு நவீன அரிசி ஆலை சுந்தரக்நோட்டை, மத்திய சேமிப்பு கிடங்கு பாமணியிலருந்து அரவை செய்த அரிசி நீடாமங்கலம் ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொது வினியாக திட்டத்திற்கு அனுப்படுகிறது. இந்நிலையில் நேற்று நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி தாலுகா பகுதிகளில் தாளடி மற்றும் சம்பா சாகுபடி செய்து இயந்திர அறுவடை செய்த நெல், அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு சன்ன ரக நெல் 2000 டன் மூட்டைகளை, லாரிகளில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து 42 வேகன் (ரயில் பெட்டி) களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏற்றி அரவைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.