சிவகாசி, செப்.26: சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் நில புரோக்கர் சின்னத்துரை(44). இவருக்கு முத்துலட்சுமி என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சின்னத்துரைக்கு அண்ணா காலனியில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் விஸ்வநத்தம் பகுதியில் கணவரை இழந்த பெண்ணுடனும் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால் விதவையின் தம்பியான இசக்கிகுட்டிக்கும், சின்னத்துரைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சின்னத்துரைக்கும், இசக்கிக்குட்டி மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சின்னத்துரையை அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சின்னத்துரை சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.