Sunday, May 19, 2024
Home » நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை ₹77.63 கோடி விநியோகம்

நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை ₹77.63 கோடி விநியோகம்

by MuthuKumar

தர்மபுரி, செப்.25: தர்மபுரி சிப்காட் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக 1462.72 ஏக்கர் எடுத்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை ₹77.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் அமைக்க ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதிக்காக காத்திருக்கிறது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டம் தர்மபுரி. போதிய வேலை வாய்ப்பு இல்லாததால், இம்மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் இளைஞர்கள் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் திருப்பூர், கோவை, கரூர் போன்ற இடங்களுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.

வேலைக்காக இடம்பெயர்வதை தடுக்க, தர்மபுரியில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்று, தமிழக அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவித்தது. இதற்காக நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தடங்கம், அதகப்பாடி, பாலஜங்கமனஅள்ளி, அதியமான்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 1733.03 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.சிப்காட் அமைக்க அரசு முன்மொழிவு அளித்தவுடன், தொழிற்சாலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறினர். ஆனால் அரசின் முன்மொழிவு வந்து பல மாதங்கள் ஆகியும், பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது. தற்போது ஆட்சி மாற்றத்தால், அதிகாரிகள் மாற்றப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருகிறது. இதில், 478.38 ஏக்கர் பட்டா நிலமும், 984.34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் என மொத்தம் 1462.72 ஏக்கர் எடுத்து, அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை ₹77.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நில எடுப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வதற்காக, ₹654.30 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி சிப்காட் தொழிற்பூங்காவிற்கு 1.35 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி ₹14.08 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்ேபாது சுற்றுச்சூழல் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மனை வரைபட அனுமதி கிடைத்தவுடன், இத்தொழில் பூங்கா செயல்பாட்டிற்கு வரும். சிப்காட்டில் சாலைகள் அமைக்கவும், மின்சார மின்விளக்கு பொருத்தவும் டெண்டர் விடப்பட்டது.

இந்நிலையில், தடங்கம் கிராமம் அருகே தர்மபுரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, சிப்காட்டிற்கு ₹14.08 கோடி மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. 1.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. மின்விளக்கு பொருத்தும் பணியும் விரைவில் நடைபெறும். சிப்காட் பணிகள் முடிந்த நிலையில் உள்ளதால், எலக்ட்ரிக் பைக் கம்பெனி உள்ளிட்ட 9 கம்பெனிகள் ஆலைகள் அமைக்க ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளன. சிப்காட்டில் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் சான்றிதழ் கிடைக்க தாமதம் ஆவதால், ஆலைகள் அமைக்க தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரியில் கடந்த 2018ம் ஆண்டு சிப்காட் அமைக்க அலுவலகம் அமைக்கப்பட்டது. இதற்காக டிஆர்ஓ, 2 தாசில்தார் மற்றும் விஏஓ.,க்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 6 ஆண்டுகளாக இடங்கள் தேர்வு செய்து, சர்வே செய்யப்பட்டது. தற்போது 1462.72 ஏக்கர் எடுத்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை ₹77.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. சிப்காட்டில் 9 பெரிய நிறுவனங்கள் அமைய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சான்றிதழ் கிடைத்தவுடன், ஆலைகள் அமைக்க கட்டுமான பணிகள் தொடங்கும்,’ என்றனர்.

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi