அகமதாபாத்: ‘நிலைமை மோசமாவதற்குள் ரசாயன ஆய்வகங்களில் இருந்து விடுபட்டு, இயற்கை விவசாய முறைகளுக்கு விவசாயிகள் மாற வேண்டும்,’ என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘இயற்கை மற்றும் பூஜ்ய பட்ஜெட் விவசாயம்’ குறித்த மூன்று நாள் உச்சி மாநாடு, குஜராத்தில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு தினமான நேற்று, காணொலி மூலம் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது: ஒன்றிய அரசு கடந்த 7 ஆண்டுகளில் விவசாய துறையில் பல சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இயற்கையை பாதுகாக்கவும், விவசாயத்தில் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றவும், வேளாண் துறையில் பல்வேறு நவீனமய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. ரசாயன ஆய்வகங்களில் இருந்து விவசாயத்தை பிரிக்க வேண்டும். நிலைமை மோசம் அடைவதற்குள் இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகள் மாற வேண்டும். அதற்கான சிறந்த தருணம் இதுதான். இயற்கை விவசாயத்தில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றின் சாணம், சிறுநீர் உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பசுமைப் புரட்சியில் ரசாயனங்கள், உரங்கள் முக்கிய பங்காற்றி உள்ளன என்பதில் மாற்று கருத்தில்லை. ரசாயன உர இறக்குமதி விலை உயர்வால் விவசாய செலவுகள் அதிகரித்து, விளை பொருட்களின் விலையும் மக்களை பாதிக்கிறது. விவசாய கழிவுகளை எரிப்பது, ரசாயன உரங்களை பயன்படுத்துவது போன்ற தவறுகளை சரி செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது. விவசாய கழிவுகளை எரிப்பதால் மண்வளம் குன்றி, உற்பத்தி குறையும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வரும் முன் காப்பதே எப்போதும் நல்லது’ என்றார்.* பஞ்சாயத்துக்கு ஒரு கிராமம் மாநில அரசுகளுக்கு அறிவுரைபிரதமர் மோடி மேலும், ‘இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், பிற நிறுவனங்களும், வேளாண் பல்கலைக் கழகங்களும், ‘ஆய்வகத்தில் இருந்து நிலத்துக்கு’ என்ற கருத்தை ஏற்றுக் கொண்டு, இயற்கை விவசாயம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தது ஒரு கிராமத்தையாவது இயற்கை விவசாயத்தின் பக்கம் மாநில அரசுகள் திருப்ப வேண்டும்,’ என்றும் பேசினார். …