ஊட்டி, ஜன. 25: தனியார் எஸ்டேட்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம், போனஸ் உள்ளிட்டவை பெற்று தரக்கோரி ஊட்டியில் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், தேவர்ேசாலை, தாய்சோலை மற்றும் நாடுகாணி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் அங்கு பணிபுாியும் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம், போனஸ், விடுப்பு ஊதியம் உள்ளிட்டவற்றை நிலுவையில் வைத்துள்ளது. மேலும் பணிக்கொடை, ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றையும் நிலுவையில் வைத்துள்ளது. இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் போன்றவைகள் வழங்கப்படாமல் உள்ளது. இவற்றை வழங்கக்கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக தொழிலாளர் துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி, வழங்குவதாக ஒப்பு கொண்டும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை எஸ்டேட் நிர்வாகங்கள் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகின்றன. இதுதவிர தேயிலை எஸ்டேட்கள் பராமரிப்பின்றி முட்புதர்கள் வளர்ந்து காட்சியளிக்கின்றன. இதனால் வனவிலங்குகளால் தொழிலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாக கூடிய நிலை அபாயம் உள்ளது.
மேலும் எஸ்டேட்டில் வசிக்க கூடிய தொழிலாளர்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. இதுபோன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். நிலுவை சம்பளம், போனஸ், விடுப்பு ஊதியம், வருங்கால வைப்பு நிதி, இறந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை மாவட்ட கலெக்டர் தலையிட்டு தீர்வு பெற்று தரக்கோரி சிஐடியு தொழிலாளர் கூட்டுக்குழு சங்கம் சார்பில் தொழிலாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கான குவிந்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் வினோத், தலைமை வகித்தார். தலைவர் சங்கரலிங்கம், பொருளாளர் நவீன் சந்திரன், தோட்ட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆஸரா, போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கணேஷ், தோட்ட தொழிலாளர் சங்கம் சுந்தரம்,மாவட்ட குழு உறுப்பினர் இளங்கோ, போராட்ட குழு நிர்வாகிகள் ரத்தினி, ஜெயந்தி, விஜயன், பிஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் கூடி இருந்து கலெக்டரை சந்தித்து விட்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து ஊட்டி ஆர்டிஓ மகராஜ், வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போராட்ட குழுவினர் 5 பேர் மட்டும் சென்று கோரிக்கைகள் குறித்து அனுமதித்தனர். அவர்களிடம் கூடுதல் ஆட்சியர் கௌசிக் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.