Sunday, May 19, 2024
Home » நிலம் கொடுத்தவர்களுக்கு இதுவரை ₹100 கோடி இழப்பீடு

நிலம் கொடுத்தவர்களுக்கு இதுவரை ₹100 கோடி இழப்பீடு

by MuthuKumar

நாமக்கல், மார்ச் 4: நாமக்கல்லில் ₹194 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு, இதுவரை ₹100 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.

நாமக்கல் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் முதலைப்பட்டியில் ₹20 கோடியில் புதிய பஸ் நிலையம், ₹194 கோடியில் புறவழிச்சாலை அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதையடுத்து, புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 4 கட்டமாக புறவழிச்சாலை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், முதற்கட்ட பணிகளை ஆய்வு செய்து ₹194 கோடியில் புறவழிச்சாலை அமைக்க, தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று(4ம் தேதி) மாலை 4 மணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., கலெக்டர் உமா, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முதலைப்பட்டியில் இருந்து வள்ளிபுரம் வரை, 22 கிமீ தொலைவிற்கு புறவழிச்சாலை அமைகிறது. இதற்கு நிலம் கொடுத்த அனைவருக்கும் இழப்பீட்டு தொகையாக, இதுவரை ₹100 கோடி மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளதாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் நகருக்கான புறவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி அருகில் இருந்து, பரமத்தி ரோட்டில் வள்ளிபுரம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில் மொத்தம் 22.387 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதில், முதலைப்பட்டி அருகே அமையும், புதிய பஸ் நிலையத்துக்கு இணைப்புச் சாலை அமைக்கப்படுகிறது. புறவழிச்சாலை தேசிய நெடுஞ்சாலை மற்றும் 4 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைத்து செல்கிறது. பெங்களூருவில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோனம் மற்றும் மயிலாடுதுறை செல்லும் வாகனங்கள் அனைத்தும், நாமக்கல் நகருக்குள் செல்லாமல் இனி புறவழிச்சாலையில் செல்லலாம். மேலும், துறையூர், பெரம்பலூர், கண்ணனூரில் இருந்து சேலம், ஈரோடு, கோவை செல்லும் வாகனங்கள் நாமக்கல் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்லமுடியும். இதனால், நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

புறவழிச்சாலை அமைக்க, 2012ம் ஆண்டில் ₹10.70 கோடியில் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டது. 2019ம் ஆண்டு ₹87 கோடிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்றது. புறவழிச்சாலை பணிக்காக 11 கிராமங்களில் மொத்தம் 134.24 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 33.29 ஏக்கர் நிலம் நிலமாற்றம் செய்யப்பட உள்ளது. இதுவரை மொத்தம் 48.30 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நில உரிமையாளர்களுக்கு ₹100 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

யாரும் இழப்பீடு தரவில்லை. கிடைக்கவில்லை என கூற முடியாது. நிலம் கொடுத்த அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தால் இழப்பீடு கொடுக்கப்பட்டு விட்டது. தற்போது, முதலைப்பட்டியில் இருந்து திருச்சி ரோடு வரை, 3 கட்டமாக புறவழிச்சாலை அமைக்க சிஆர்ஐடிபி திட்டத்தின்கீழ், 12 கி.மீ. நீளத்திற்கு, ₹184 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில், முதலைப்பட்டி மற்றும் முதலைப்பட்டிப்புதூர், செல்லிபாளையம், மரூர்ப்பட்டி, செம்பாறைப்புதூர், விட்டமநாய்க்கன்பட்டி, வீசானம், வேட்டாம்பாடி, முத்துகாப்பட்டி, சிவியாம்பாளையம், கூலிப்பட்டி, ரெட்டிப்பட்டி, பொம்மசமுத்திர அக்ரஹாரம், வேப்பநத்தம், வேப்பநத்தம்புதூர், வசந்தபுரம் ஆகிய கிராமங்களின் வழியாக புறவழிச்சாலை அமைவதால் அந்த கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

4 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi