ஈரோடு, ஜன.13: பெருந்துறை அடுத்துள்ள திங்களூர் தண்டகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி (60). விவசாயியான இவர், கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதற்காக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரசாமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த குமாரசாமி தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் விஷ மாத்திரையை எடுத்து தின்றுள்ளார். இதையறிந்த குடும்பத்தினர் உடனடியாக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி குமாரசாமி இறந்தார்.